Wednesday, December 17, 2008

பூஉறவின் புதியவரவு

அழகிழந்த மலர்களுக்கு
அவள் காரணமாகிவிட்டாள்.

அவளுடைய உதடுகள்
பெரும்பாலும் சிரிப்பை
மட்டுமே சிரிக்கின்றன.
வாழ்த்துக்களை வழியனுப்பியே
என்னைத்
தொலைபேசிக்குள் தொலைத்துவிட்டாள்.
அவள் கொடுத்த அன்புப் பரிசுகள்
எனக்குள் நானே ஏலம்விட்டு
இன்னும் விலைபோகாதவை.

சலனப்படும் மனங்களுக்கு
சாட்டையடி கொடுக்கும்
கலப்படமற்ற பார்வை.
கொஞ்சம், மனம் திறந்து
கொஞ்சும் மொழி பேசுவாள்.
கோடைவெயிலுக்கும்
குளிர்காய்ச்சல் வந்துவிடும்.
குலுங்கும் கொலுசுமணியோசை,
சேகரித்த என்செவிகள்
முக்தியடைந்தன.

காலைப் பேருந்தின்
சாளர இருக்கையிலிருந்து
கம்பிகளின் ஊடே
கண்ணசைத்து கைகாட்டுவாள்.
காற்றுசெய்த கலவரத்தில்
அவள் கூந்தல் களைந்திருக்கும்.
அதில் காயா ஈரம்,
காதோர முடிவழியே
கன்னத்தில் வழியும்.
அது அகிம்சாவாத நீர்வீழ்ச்சி.

ஸ்டிக்கர் பொட்டை
சரியாய் வைத்திருக்காமாட்டாள்.
இருந்தும் அவள்நெற்றி
இரண்டு புருவங்களுக்கிடையில்
புன்னகை துளிர்க்கும்.
தென்றலைத் தாலாட்டும் அவள்
துப்பட்டா அசைவுகளுக்கு
இணங்க என்மனம் மறுத்ததில்லை.

சிலசமயம் சோகமாகிவிடுவாள்.
அப்பொழுதுமட்டும் என்
சொர்க்கத்தில் ஊரடங்கு உத்தரவு.
தோல்வியின் விளிம்பில் நான் துவண்டிருந்தால்
உதட்டுவார்த்தைகளால்
உள்நெஞ்சில் ஒத்தடமிடுவாள்.

இயற்கையின் படைப்பில்
இத்தனை மென்மையா?
பிறவிகளில் அரியதோர்
புதையலிந்தப் பெண்மையா?
இப்படியொரு புதிய உறவுக்காகத்தான்
பிறவியெடுத்தேனோ?
அடிக்கடி அடிநெஞ்சில்
சந்தேகம் புருவமுயர்த்தும்.

என் கல்லூரிவாழ்வில்
வசந்தமாய்ப் பூத்தவளே!
நட்பில் பிரிவுண்டென்றால்
அந்த நட்பிலெனக்கு நம்பிக்கையில்லை.
கடைசிவரை உன்னுறவு வேண்டும்,
தொடர்வாயா?
கனவாய் களைந்து போவாயா?

3 comments:

  1. meghavum arrumai,,mennmayana kavithai naddai,,it is so soft,,,

    ReplyDelete
  2. இயற்கையின் படைப்பில்
    இத்தனை மென்மையா?
    பிறவிகளில் அரியதோர்
    புதையலிந்தப் பெண்மையா?
    இப்படியொரு புதிய உறவுக்காகத்தான்
    பிறவியெடுத்தேனோ?
    ////தொடர்வாள் ,படர்வாள்,வாழ்வில் நிறைவாள் ..கவலை படாதிங்க

    ReplyDelete