Wednesday, December 17, 2008

மழை

முகிலெடுத்து வான்வெளி
முத்துமழை தூவியது.
மழை மண்ணைச் சேருமுன்னே
மண்வாசம் என்னைச் சேர்ந்தது.

பூக்களிலே தேனெடுத்த
பொன்வண்டுகள் காணவில்லை.
பூங்காற்றில் புழுதியெலாம்
போன இடம் தெரியவில்லை.

நீர்வடியும் இலைகளிலே
நேற்றில்லா நடுக்கங்கள்.
நீலவானில் கீறல்விடும்
நீளமான சுருக்கங்கள்.

மரக்கிளையில் பறவையெலாம்
கூடுகளில் குளிர்காய
அடிக்கடி பயமுறுத்தி
அலறுகிறது இடியோசை.

காடுகளில் நீரோட
வண்ணமயில் நீராட
ஈரக்காற்று என் ஈரல் தொட்டது.

தூரலின் இரைச்சலை
தொடங்கியதும் நான் இரசிக்க
இடைவந்த இடரொன்றாய்
தவளைகள் கர்ஜிக்க
தரைமேல் வெப்பமெலாம்
தலைதெறிக்க ஓடக்கண்டேன்.

தட்டுகளில் நீர்தெறித்து
தாளங்கள் எழுகையிலே
மிச்சமுள்ள வறட்சியெலாம்
மாண்டுபோக நான்கண்டேன்.

இறங்கிவந்து மண்மேலே
ஈரக்கவிதை மேகமெழுத
இயற்கையின் குளியலை
இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.

மெய்மறந்து இரசிக்கையில்
முழுக்க நனைந்து நான் நின்றேன்.

2 comments:

  1. இயற்கையின் குளியலை
    இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.


    wonderful creativity,,nice thought and feeling,,good one

    ReplyDelete