Wednesday, December 17, 2008

இசை

செதுக்கப்பட்ட ஒலி

சப்தம் எடுத்த சபதம்

நிறைவேறியதன் விளைவு.

காற்று பேசும் காவியம்.

சுரங்கள் தீட்டும் ஓவியம்.

இராகங்களால் உள்மனதை

இரட்சிக்கும் ஏற்பாடு.

செவிகளுக்கு ஒப்பற்ற அணிகலன், இசை.

அப்துல் கலாம்

இந்தியக் கூட்டிற்கு இரைதேடி

இந்த நீலப்புறா,

அணுக்களை அசைபோட்டுக்கொண்டே

அயராது சிறகடித்துக்கொண்டிருக்கிறது,

அதன் அக்னிச்சிறகுகளால்...

காதல்

இதயத்தின் நான்கறைகளிலும்

இடியுடன் கூடிய மழை.

உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்

என் நுரையீரலை வட்டமிட்டபடியே.

உன் நிழல் தீண்டித்தீண்டியே

என் ரேகை தேயும்.

என் நெற்றிச் சுருக்கங்களில்

உன் நினைவு விரியும்.

ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்

உன் கண்களின் கார்காலம்

என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.

மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு

மங்கலாகத் தெரிகின்றது.

இப்பொழுது என்னுடலில்

இதயம் மட்டுமே அசைகிறது.

அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?

என் மனமின்னும் மார்க்கண்டேயன்,

நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.

இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.

அழகி

என் ஊரில்
நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.

ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.
நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.
நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.
இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.

என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.
எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.

நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.

மழை

முகிலெடுத்து வான்வெளி
முத்துமழை தூவியது.
மழை மண்ணைச் சேருமுன்னே
மண்வாசம் என்னைச் சேர்ந்தது.

பூக்களிலே தேனெடுத்த
பொன்வண்டுகள் காணவில்லை.
பூங்காற்றில் புழுதியெலாம்
போன இடம் தெரியவில்லை.

நீர்வடியும் இலைகளிலே
நேற்றில்லா நடுக்கங்கள்.
நீலவானில் கீறல்விடும்
நீளமான சுருக்கங்கள்.

மரக்கிளையில் பறவையெலாம்
கூடுகளில் குளிர்காய
அடிக்கடி பயமுறுத்தி
அலறுகிறது இடியோசை.

காடுகளில் நீரோட
வண்ணமயில் நீராட
ஈரக்காற்று என் ஈரல் தொட்டது.

தூரலின் இரைச்சலை
தொடங்கியதும் நான் இரசிக்க
இடைவந்த இடரொன்றாய்
தவளைகள் கர்ஜிக்க
தரைமேல் வெப்பமெலாம்
தலைதெறிக்க ஓடக்கண்டேன்.

தட்டுகளில் நீர்தெறித்து
தாளங்கள் எழுகையிலே
மிச்சமுள்ள வறட்சியெலாம்
மாண்டுபோக நான்கண்டேன்.

இறங்கிவந்து மண்மேலே
ஈரக்கவிதை மேகமெழுத
இயற்கையின் குளியலை
இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.

மெய்மறந்து இரசிக்கையில்
முழுக்க நனைந்து நான் நின்றேன்.

அநாதைப் பிணம்

ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?